1. Home
  2. தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால்...ராமதாஸ் எச்சரிக்கை..!

ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால்...ராமதாஸ் எச்சரிக்கை..!


“ஆன்லைன் சூதாட்டத்தை விரைவில் கட்டுப்படுத்தாவிட்டால் பெரும் பிரச்னையாக உருவெடுக்கும். எனவே உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்காமல் தமிழக அரசு திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்” என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கூடல் நகரில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர் அவரது வீட்டின் பின்புறம் அடித்து கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதலில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். பின்னர், ஆன்லைனில் சூதாட மற்றவர்களை கொலை செய்தனர்.

இப்போது, ஆன்லைனில் சூதாடியவர்கள் கொல்லப்படுகின்றனர். இப்படி, பலவகையான குற்றங்களின் பிறப்பிடமாக ஆன்லைன் சூதாட்டம் உருவெடுத்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தால் மக்களும், குடும்பங்களும் சீரழிவதை நாம் இன்னும் எத்தனை நாட்களுக்கு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறோம்..?

இது உடனடியாக தடை செய்யப்படாவிட்டால், வெகு விரைவில் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரும் பிரச்சினையாக பேருருவெடுக்கும்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ரத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஆனால், இதுவரை எந்த விசாரணையும் இல்லை.

அதனால், உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்காமல், திருத்தப்பட்ட ஆன்லைன் தடை சட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like