எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன் - சாமியார் காளிசரண் மகாராஜ்..!!
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடந்த ‘தர்ம் சன்சாத்’ நிகழ்ச்சியில் தேசப்பிதா காந்தியைக் கொன்ற நாது ராம் கோட்சேவை சாமியார் காளிசரண் மகாராஜ் பாராட்டி பேசினார். இது பெரும் சர்ச்சையானது.
மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, டிசம்பர் 30-ம் தேதி, சத்தீஸ்கர் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். போலீசுக்கு பயந்து தலைமறைவாக இருந்த சாமியாரை தீவிர தேடுதல் வேட்டைக்கு பின், போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்று மாதங்களுக்குப் பிறகு அவருக்கு சத்தீஸ்கர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஜாமீன் வழங்கியது.
இதனையடுத்து, சிறையில் இருந்து வெளியே வந்த காளிசரண் மகாராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “எனது நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். நான் நன்றாக சிந்தித்தே அவ்வாறு சொன்னேன், அதில் எவ்வித வருத்தமும் இல்லை. சத்ரபதி சிவாஜி மகாராஜ், குரு கோவிந்த் சிங் மகராஜ் மற்றும் ராணா பிரதாப் போன்ற பெரிய மனிதர்களைப் பற்றி தவறாகப் பேசிய நபரை நான் வெறுக்கிறேன்” என்று கூறினார்.