காதல் திருமணம் செய்த மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்!!
பட்டப்பகலில் காதல் மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்துவிட்டு கணவன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டிகோரெயான் என்பவர் 9 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த ஜெபினா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் இருவரும் திண்டுக்கலுக்கு குடிபெயர்ந்தனர்.
அவர்களுடன் ஸ்டிகோரெயான் தாயாரும் வந்து தங்கியுள்ளார். இதனிடையே அவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் செல் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்துள்ளார். மேலும் கணவன், மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஸ்டிகோரெயான் தனது காதல் மனைவியை கழுத்தை அறுத்து படுகொலை செய்தார்.
மனைவியை கொலைசெய்த பயத்தில் தானும் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். தலை மற்றும் கைகளில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இறந்துபோன ஜெபினாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காதல் திருமணம் செய்து ஒன்பது மாதங்களில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
newstm.in