பாலியல் தொழிலாளியுடன் சேர்ந்து மனைவியை தீர்த்துகட்டிய கணவன்.. பகீர் பின்னணி !
தொழில் போட்டி காரணமாக பாலியல் தொழிலாளியை தீர்த்துக்கட்டிய முன்னாள் கணவன் மற்றும் பாலியல் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லம் வடகால் பகுதியில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து அங்கு விரைந்த காவல்துறையினர், இளம்பெண்ணின் உடலை மீட்டு விசாரணையை துரிதப்படுத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மர்மமான முறையில் இறந்துகிடந்த அந்த பெண், காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த 26 வயதான பிரியா என்பதைக் கண்டுபிடித்தனர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார் என்றும் தெரியவந்தது.
மேலும், கணவரை பிரிந்து காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த 25 வயதான வெங்கடேசனுடன் பிரியா சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். பிரியா மரணத்துக்கு பிறகு வெங்கடேசன் தலைமறைவான நிலையில் இந்த பெண்ணின் உயிரிழப்பிற்கும், வெங்கடேசனுக்கும் தொடர்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர்.
இதனிடையே காவல்துறை நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்த பிரியா ,கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும், இவரை திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் புரோக்கர் ஜோதி, பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது. இதற்கு வெங்கடேசன் உறுதுணையாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடேசன் மற்றும் ஜோதி ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தினர். ஆனால் இவர்களுக்கும் பிரியா மரணத்துக்கு தொடர்பில்லை என தெரியவந்தது.
காவல்துறை நடத்திய விசாரணையில், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு பிரியா காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த நவீன் என்ற நபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். நவீன் பிரியாவை விட மூன்று வயது சிறியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இருவருக்கிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்த நிலையில் பிரியா மற்றும் நவீன் ஆகியோர் பிரிந்து வாழ்ந்து உள்ளனர். இந்த நிலையில் தான் கணவனை இழந்த, காஞ்சிபுரம் பல்லவர் மேடு பகுதியை சேர்ந்த கல்பனா என்ற பாலியல் தொழில் செய்யும் பெண்ணுடன் நவீனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ‘கல்பனா மற்றும் அவருடைய சகோதரர் இருவரும் கஞ்சா வியாபாரத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பாலியல் தொழில் செய்து வந்த பிரியா தனது முதல் கணவர் நவீனை, பொது இடங்களில் பார்க்கும் பொழுதெல்லாம் அவமதிக்கவும் செய்துள்ளார். தவிர கல்பனா, அவரது தம்பி காளிதாஸ் ஆகியோர் காஞ்சிபுரத்தில் கஞ்சா விற்பது குறித்து காவல்துறையினருக்கு பிரியா தகவல் தெரிவித்துள்ளார். இதனால் கல்பனா, காளிதாஸ் கைதாகி சில மாதங்களுக்கு முன்பு சிறைக்குச் சென்றனர்.
சிறையில் இருந்து வெளியே வந்த கல்பனா, நவீனுடன் சேர்ந்து பிரியாவை கொலை செய்ய திட்டம்போட்டனர். அதன்படி, காஞ்சிபுரம் பகுதியில் உள்ள வீட்டுக்கு வரவழைத்து ஒன்றாக மது அருந்திய பின்னர் பிரியாவை அவர்கள் கொலை செய்துவிட்டு உடலை வீசிச்சென்றனர். இந்த நிலையில், நவீன் மற்றும் கல்பனா ஆகிய இருவரும் தொழில் போட்டியின், காரணமாக தான் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in