பொதுமக்கள் வசதிக்காக உதவி எண்கள்.. தமிழக அரசு சார்பில் வெளியீடு..!
தமிழக சட்டப்பேரவையில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை, சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமை அமைச்சர் கீதா ஜீவன் வாசித்தார்.
அதில், அரசுப் பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் திட்டம் மூலம் சுமார் 91.85 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2021 - 2022-ம் ஆண்டில் 267 குழந்தைகள் தத்து வழங்கப்பட்டுள்ளது.
பெண் சிசுக்கொலை எனும் தீய பழக்கத்தை தடுக்க அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மார்ச் 2022 வரை மொத்தம் 5,781 குழந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், மூத்த குடிமக்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில் அதிகமாக உள்ளது. 2031-ம் ஆண்டில் மாநிலத்தில் உள்ள மூத்த குடிமக்களின் விழுக்காடு 18.20% ஆக உயரும் போது எண்ணிக்கை 1.50 கோடியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதுகாப்புக்கான அரசின் உதவி எண்கள் என்னென்ன? என்பது குறித்தும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, குழந்தைகளுக்கான உதவி எண் - 1098, மகளிருக்கான உதவி எண் - 181, முதியோருக்கான உதவி எண் - 14567, இணையதள குற்றத் தடுப்புக்கான உதவி எண் - 1930. பொதுமக்கள் இந்த எண்களை தொடர்பு கொள்ளலாம் என விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.