1. Home
  2. தமிழ்நாடு

90 வயது பாட்டியை எரித்துக் கொன்ற பேத்திகள்..!!

90 வயது பாட்டியை எரித்துக் கொன்ற பேத்திகள்..!!


நெல்லை மாவட்டம் பேட்டையிலிருந்து பழையபேட்டை செல்லும் ஆதம்நகரில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடலை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த வந்த போலீசார், அங்கு சென்று பார்த்தபோது தீ வைத்து எரிக்கப்பட்டு கருகிய நிலையில் மூதாட்டியின் உடலை பார்த்தனர்.

உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், தீ வைத்து எரிக்கப்பட்ட மூதாட்டி யார்? இது கொலையா? என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் போலீசாரிடம் மூதாட்டி மரணம் குறித்து ரகசிய தகவல் அளித்தார்.

அதன் பேரில், பேட்டை கிருஷ்ணபேரியை சேர்ந்த பொன் ஆறுமுகம்பிள்ளை என்பவரது மனைவி மாரியம்மாள் (வயது 30) மற்றும் இவரது சகோதரியான செக்கடி தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் மனைவி மேரி (வயது 38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது, “பேட்டை கிருஷ்ணபேரியைச் சேர்ந்தவர் சுப்பம்மாள் (வயது 90). வயோதிக்கத்தால் பாதிக்கப்பட்ட இவரை, மகள் வழி பேத்திகள் மாரியம்மாள், மேரி கவனித்து வந்தனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுப்பம்மாளை, மருத்துவர்கள் வீட்டுக்கு துாக்கிச் செல்லும்படி கூறினர். அதன்படி, அவரை இரு நாட்களுக்கு முன் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். உயிருக்கு போராடிய அவரை, பேத்திகள் ஒரு ஆட்டோவில் அழைத்துச் சென்று, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர். பேத்திகள் தன் மீது பெட்ரோல் ஊற்றும் போது, ‘என்னை கொல்லப் போகிறீர்களா?’ என, அந்த மூதாட்டி பரிதாபமாக கேட்டுள்ளார். வயோதிகம் காரணமாக சத்தம் போடாமல் தீக்கு இரையானார்.” என்று தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like