ஓய்வூதியர்களுக்கு குட் நியூஸ்.. விவரம் கேட்கிறார் மாவட்ட கலெக்டர்..!
“பணி ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வூதியம் கிடைக்கப் பெறாதவர்கள், அது குறித்த விவரத்தை மனுவாக அனுப்பி வைக்கலாம்’’ என்று மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், “கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வரும் மே மாதம் 13ம் தேதி காலை 10.30 மணிக்கு, ஓய்வூதியர் குறைதீர்ப்பு கூட்டம் நடக்கிறது. இதையொட்டி, பணி ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வூதியம் கிடைக்கப் பெறாதவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகின்றன.
அரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வூதியம், இதர பலன்கள் இதுவரை கிடைக்காமல் இருந்தால், அதைப் பற்றிய விவரங்கள் இருந்தால் மனு கொடுக்கலாம். மனுவை இரட்டை பிரதிகளில் மே 5ம் தேதிக்குள் கிடைக்கும்படியாக நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம்.
பெயர் மற்றும் முகவரி, பி.பி.ஓ. எண், ஓய்வு பெற்ற நாள், கடைசியாக வகித்த பதவி மற்றும் துறை, குறைகள் (தனி தாளில்), முந்தைய தகவல் இருந்தால் அதன் விவரம், வழக்கு இருந்தால் அதன் விவரம், குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டிய அலுவலர் விவரம் ஆகியவற்றுடன் மனு அனுப்ப வேண்டும்.
மே மாதம் 13-ம் தேதி நடக்கும் ஓய்வூதியர் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்” எனத் தெரிவித்துள்ளார்.