டிப்ளமோ படித்தவர்களுக்கு நற்செய்தி.. அமைச்சர் பொன்முடி பேரவையில் அறிவிப்பு..!
தமிழக சட்டப்பேரவையில் இன்று (11-ம் தேதி), உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
இதன் பதிலுரையில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “டிப்ளமோ படித்தவர்களும் இனி Lateral Entry மூலம் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேரலாம்.
அதாவது, பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 2-ம் ஆண்டு சேரலாம். பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த 6 லட்சம் மாணவர்களின் உயர் கல்விக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் சிறைக்கைதிகள், திருநங்கைகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும்.
தொழிற்சாலைகளில் பணிபுரியும் பட்டயப் படிப்பு படித்தவர்களுக்கு, பணிபுரிந்து கொண்டே பொறியியல் பட்டம் பயில்வதற்கான திட்டம் உருவாக்கப்படும்.
வரும் கல்வியாண்டில் 10 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும். 56 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். 41 உறுப்புக் கல்லூரிகள், விரைவில் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும்” என்றார்.