இலங்கையில் முதலீடு செய்தால் கோல்டன் விசா!!
இலங்கை அரசு அந்நியச் செலாவணியை அதிகரிக்க 10 வருடங்கள் வரை தங்கியிருந்து தொழில் செய்யும் கோல்டன் விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை தொட்டதால் அதிபர் கோட்டாபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. அதன்படி இலங்கையில் 1,00,000 அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யும் வெளிநாட்டினருக்கு 10 ஆண்டுகள் இலங்கையில் தங்கி பணியாற்ற வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
75 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்புக்கு அடுக்குமாடி கட்டடங்கள் வாங்கும் நபர்களுக்கு ஐந்து ஆண்டு விசா வழங்கப்பட உள்ளது. இந்த அறிவிப்புகள் இலங்கை நாட்டின் முதலீடுக்கு உதவும் என அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பியுள்ள இலங்கையின் பொருளாதாரம் கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை அரசு இதுபோன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
newstm.in