சிறந்த நூலுக்கான பரிசை மறுத்த இறையன்பு.. காரணம் என்னன்னு தெரியுமா..?
தமிழகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு முதல், தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்கள் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில், கடந்த 2018-ம் ஆண்டு வெ.இறையன்பு ஐஏஎஸ் எழுதிய ‘மூளைக்குள் சுற்றுலா’ என்ற நூல் சிறந்த நூலாக தேர்வு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த நூலை எழுதிய ஆசிரியர் வெ.இறையன்பு மற்றும் பதிப்பகத்தாருக்கு பரிசு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இது குறித்து இறையன்புவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால், தான் அரசுப் பதவியில் இருப்பதால் தமிழக அரசின் விருது மற்றும் பரிசுத்தொகையை ஏற்ற மறுப்பதாக இறையன்பு கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் மகேசன் காசிராஜனுக்கு வெ.இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், “தமிழில் வெளியிடப்படும் சிறந்த நூல்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் 2018-ம் ஆண்டு வெளிவந்த நூல்களில் போட்டிக்கு வரப்பெற்று, தெரிவுக் குழுவால் சில நூல்கள் தேர்வு செய்யப்பட்டன.
அதில், எனது நூலான ‘மூளைக்குள் சுற்றுலா’ தெரிவு செய்யப்பட்டு, சனிக்கிழமை நடைபெறவிருக்கும் அரசு விழாவில் பரிசு பெற அழைக்கப்பட்டுள்ளேன். இதற்கு மனமார்ந்த நன்றியை அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழாவில், தலைமைச் செயலராக பரிசு பெறுவது ஏற்புடையது அல்ல. எனவே, எனது படைப்புக்கு வழங்கப்படும் பரிசை தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்குவதற்கு ஏற்பாடு செய்த நிலையில், தலைமைச் செயலராக பதவி வகித்து வருவதால் பரிசையும், பாராட்டையும் ஏற்க மறுத்துள்ள இறையன்புவின் செயல் பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்படுகிறது.