திருப்பூரில் நெகிழ்ச்சி.. ஆம்புலன்சில் வந்து பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவி..!
திருப்பூரில், ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்புக்கு அறுவை சிகிச்சை செய்து மருத்துவமனையில் இருந்த மாணவி ஆம்புலன்ஸ் உதவியுடன் தேர்வு மையத்திற்கு வந்து பிளஸ் 2 தேர்வு எழுதிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், குப்பாண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவரது மனைவி கீதா. இந்தத் தம்பதியின் மகள் ரிதன்யா. இவர், திருப்பூர் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 1-ம் தேதி ரிதன்யாவுக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர், திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு முன்னர் அவருக்கு நுண் துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மாணவி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே, இன்று (5-ம் தேதி) பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் சூழலில் மருத்துவமனையில் இருந்த ரிதன்யா தானும் தேர்வு எழுத வேண்டும் என பெற்றோரிடமும், மருத்துவரிடமும் தெரிவித்துள்ளார்.
மாணவியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, மருத்துவர் அறிவுரையின் பேரில் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செவிலியர்கள் உதவியுடன் வந்து தேர்வு எழுதியுள்ளார்.
மாணவி ரிதன்யாவின் மன உறுதியையும், மருத்துவர்களின் உதவியையும் அனைவரும் மனமார பாராட்டி வருகின்றனர்.