தேர்வு பயமா?? முதல் நாளில் 32,674 மாணவர்கள் ஆப்சென்ட்..!!
தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத் திட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது.
மொத்தம் 3,119 மையங்களில் நடைபெற்று வரும் இந்தத் தேர்வை 8 லட்சத்து 37 ஆயிரத்து 311 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களில் 3,98,321 பேர் மாணவர்கள் ஆவர். 4,68,587 மாணவிகள் ஆவர். வருகிற 28-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடைபெறாத நிலையில், 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சந்திக்காத மாணவர்கள் தான் நேற்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியுள்ளனர். இதனிடையே தேர்வு பயம் காரணமாக சேலத்தில் 2 மாணவர்கள், மதுரையில் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மொழிப்பாட தேர்வு நடைபெற்ற நிலையில் தேர்வு எழுத விண்ணப்பித்த 8 லட்சத்து 37 ஆயிரத்து 317 மாணவ, மாணவியர்களில் 32,674 பேர் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாக பொதுத்தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை 6 முதல் 7 சதவீதம் வரை இருக்கும். ஆனால் இந்த ஆண்டு பொதுத்தேர்வின் முதல் நாளிலேயே 32 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருந்துள்ள தேர்வு பயம் காரணமாக மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லையா? என்பன போன்ற கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.