மாவட்ட செயலாளர் பதவியை விட்டுக்கொடுத்தார் எடப்பாடி பழனிசாமி..!
அதிமுகவில், நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான அமைப்பு தேர்தல் பல்வேறு கட்டங்களாக நடந்து வருகிறது. ஏற்கனவே பேரூர், நகர, ஒன்றிய கிளை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் மாவட்ட செயலாளர் பதவிக்கான தேர்தல் கடந்த 25-ம் தேதி நடைபெற்றது.
இதில், மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட 9 பொறுப்புகளுக்கான வேட்பு மனுக்கள் வழங்கப்பட்டது. குறிப்பாக மாவட்ட அவைத்தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட இணைச்செயலாளர், இரண்டு துணைச் செயலாளர்கள், பொருளாளர் என 9 பதவிகளுக்கு வேட்புமனுக்கள் வழங்கப்பட்டது.
சேலம் புறநகர் மாவட்டத்திற்கான தேர்தல் ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பதவிக்கு மீண்டும் எடப்பாடி பழனிசாமி விருப்ப மனு பெற்றார். அதேபோல், எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான இளங்கோவனும் விருப்ப மனு பெற்றார்.
இந்நிலையில், அதிமுக தலைமையிலிருந்து கழக அமைப்பு தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு இளங்கோவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், 2011-ம் ஆண்டு முதல் கடந்த 12 ஆண்டுகளாக புறநகர் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்த எடப்பாடி பழனிசாமி வசம் இருந்த பொறுப்பு இளங்கோவனுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.