#BREAKING:- துரை வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்த 3 மாசெ-க்கள் நீக்கம்.. வைகோ அதிரடி நடவடிக்கை..!
மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோவை நியமித்ததற்கு சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், எதிர்ப்பு தெரிவித்த சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்ட செயலாளர்களை மதிமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுகுறித்து மதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதிமுகவின் கட்டுக்கோப்பை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருகின்ற புலவர் சே.செவந்தியப்பன் (சிவகங்கை மாவட்டச் செயலாளர்), டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர்), ஆர்.எம்.சண்முகசுந்தரம் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்) ஆகியோர், கழக சட்டதிட்ட விதிகளின்படி, மாவட்டச் செயலாளர் பொறுப்பு உட்பட கழகத்தில் வகித்து வருகின்ற அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும், தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகின்றனர்.
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து, கழகத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை மேற்கொள்ளும். அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின்படி இறுதி முடிவுகள் மேற்கொள்ளப்படும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.