மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு.. வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!
இந்து முன்னேற்ற கழகத்தின் தலைவரும், வழக்கறிஞருமான கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “பள்ளி மாணவர்கள் இடையே வேறுபாட்டை களையும் வகையில் 1960-ம் ஆண்டு மாணவர்களுக்கான சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது.
இது தொடர்பான விதிகளை பல பள்ளிகள் பின்பற்றவில்லை. மேலும், ஹிஜாப் போன்ற மத அடையாளங்களை கொண்ட ஆடைகளை மாணவர்கள் அணிந்து வருவது விதிகளுக்கு எதிரானது.
மாணவர்களிடம் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், மதத்தின் பெயரால் சமத்துவயின்மையை ஏற்படுத்துவதை தடுக்கவும், கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட ஹிஜாப் போன்ற பிரச்சனை தமிழகத்தில் ஏற்படாமல் தடுக்கும் வகையிலும் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும். மத அடையாள உடைகளுக்கு தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இந்த மனு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்செல்வி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர்களுக்கு ஆடை விவகாரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் எப்படி இதை விசாரணைக்கு ஏற்க முடியும்..? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.