தீ விபத்து.. எலெக்ட்ரிக் பைக் நிறுவனங்களுக்கு செக் வைத்த மத்திய அரசு !!
இந்தியாவில் புதிய எலெக்ட்ரிக் பைக்களை அறிமுகப்படுத்த வேண்டாம் என உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
எரிபொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களிடையே எலெக்ட்ரிக் பைக் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. அதேநேரத்தில் மக்களும் பேட்டரியில் இயங்கும் பைக்குகளை ஆர்வமுடன் வாங்கி வருகின்றனர்.
ஆனால், கடந்த சில மாதங்களாக எலெக்ட்ரிக் பைக் வைத்திருப்பவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பலர் புதிதாக வாங்கவும் தயக்கம் காட்டுகின்றனர். அதாவது, எலெக்ட்ரிக் திடீரென தீப்பிடித்து எரிவது தொடர் கதையாகி உள்ளது. வேலூரில் மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்ததில், தந்தை மற்றும் மகள் இருவர் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. மேலும் பல இடங்களில் எலெக்ட்ரிக் பைக்கள் தீப்பிடித்து வருகின்றன.
இதனிடையே, எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி நிறுவனங்களான ஒகினாவா மூவாயிரம் வாகனங்களையும், பியூர் இவி நிறுவனம் இரண்டாயிரம் வாகனங்களையும், ஓலா நிறுவனம் ஆயிரத்து 400க்கும் அதிகமான வாகனங்களையும் பிரச்சனையை சரி செய்து தர திரும்ப பெற்றுள்ளன.
இந்நிலையில், எலெக்ட்ரிக் பைக் தீப்பிடித்த சம்பவங்கள் தொடர்பான விசாரணை முடியும் வரை, புதிய வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய வேண்டாம் என அனைத்து நிறுவனங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பிட்ட பேட்ச்சில் ஏதேனும் ஒரு வாகனம் தீப்பிடித்து எரிந்தாலும், அந்த பேட்ச்சில் உள்ள அனைத்து வாகனங்களையும் பயனாளர்களிடம் இருந்து திரும்பப் பெற்று சரிபார்க்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் பைக் வாகனங்களின் விற்பனைக்கு மத்திய அரசு எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கவில்லை.
newstm.in