கோடநாடு வழக்கில் குற்றவாளிகளை நெருங்கியதா காவல்துறை? - ஜெயலலிதா உதவியாளரிடம் மீண்டும் விசாரணை !
தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்திய கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் மறு விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னாள் முதலமைச்சர்கள், அமைச்சர்கள், அதிமுகவினர் தொடர்பு இருப்பதாக கருதப்படும் இந்த வழக்கு விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய திமுக ஆட்சியில் இதற்காக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இதுவரை 220-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழலில் சசிகலாவிடம் போலீசார் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். மேலும் கோவையை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி, அவரது மகன், அவரது தம்பி மகன் உள்ளிட்டோரிடமும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.
கோடநாடு பங்களாவில் மர வேலைப்பாடுகள் செய்த அதிமுக நிர்வாகி சஜிவன் மற்றும் அவரது அண்ணனிடம் தனிப்படையினர் 2 நாட்கள் விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த பூங்குன்றனிடம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து அவருக்கு தனிப்படையினர் சம்மன் அனுப்பினர். இதனைத்தொடர்ந்து பூங்குன்றன் நேற்று காலை 11 மணி அளவில் கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளி மைதான அலுவலகத்திற்கு வந்தார். அவரிடம் ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின்போது கோடநாடு பங்களாவில் எந்த மாதிரியான ஆவணங்கள் இருந்தன. ஜெயலலிதா பங்களாவில் இருந்த போது யார் யாரெல்லாம் அங்கு வந்தார்கள், அங்கு ஆவணங்களை பாதுகாக்க செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்த பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தொடர்ந்து 2-வது நாளாகவும் பூங்குன்றனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியிருந்தனர்.
இந்நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதா உதவியாளரிடம் தனிப்படை போலீசார் இன்று மீண்டும் விசாரணை நடத்த உள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in