1. Home
  2. தமிழ்நாடு

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி..!!

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு..! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பெண்கள் தீக்குளிக்க முயற்சி..!!


தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே பையர்நாயக்கன்பட்டி மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 44). இவருக்கு அரசு சார்பில் 3 சென்ட் நிலம் பட்டா கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த நிலத்தில் வீடு கட்டும் முயற்சியில் குமார் ஈடுபட்டு வந்தார்.

அதே பகுதியை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர் மற்றும் அவரது மகன் ஆகியோர், குமாரிடம் தகராறு செய்து வந்துள்ளனர். இந்த நிலம் தங்களுக்கே சொந்தம் என்றும், நிலத்தை காலி செய்யாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்த தாகவும் கூறப்படுகிறது.

இதனால் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வேதனை அடைந்தனர். இதுகுறித்து அரூர் டி.எஸ்.பி. மற்றும் காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

இதையடுத்து குமார் தனது மனைவி விஜயலட்சுமி (வயது 38), தாய் ஜெயா (வயது 60), தங்கைகள் சுமதி (வயது 40), ஹரிணி (வயது 19) மற்றும் குழந்தைகளுடன் வந்திருந்தார். அப்போது விஜயலட்சுமி உள்பட 4 பெண்களும் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைக்க முயன்றனர். இதை பார்த்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். உடனே 4 பெண்களையும் தடுத்து நிறுத்தி, அவர்கள் உடலில் தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர்.

இதன்பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது தங்களது நிலத்தை அரசியல் கட்சி பிரமுகர் அபகரிக்க முயற்சி செய்வதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

இதன்பின்னர் தீக்குளிக்க முயற்சி செய்த 4 பெண்களையும் விசாரிப்பதற்காக தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.

Trending News

Latest News

You May Like