கழுத்தை நெரித்த கடன்.. தம்பதி எடுத்த விபரீத முடிவு..!
செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (41). இவருடைய மனைவி சசிகலா(38). தொழில் அதிபரான சதீஷ்குமார் கடந்த சில மாதங்களாக தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு, அதிக கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று (28-ம் தேதி) இரவு கணவன் - மனைவி இருவரும் சென்னை மாம்பலம் ரயில் நிலையத்தின் 4 வது நடைமேடை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அப்போது, சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், அதிக கடன் தொல்லையால் சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
கடன் தொல்லை காரணமாக கணவன் - மனைவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.