பணியின்போது நெஞ்சுவலி.. 55 பயணிகளின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த தமிழன்..!
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில், 55 பயணிகள் இருந்தனர். பஸ்சை, நெல்லை தாமிரபரணி பணிமனையைச் சேர்ந்த முருகேசபாண்டியன் (59) என்பவர் ஓட்டிச் சென்றார்.
சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடல் பகுதியில் பஸ் வந்தபோது, டிரைவர் முருகேசபாண்டியன் சாலை ஓரமாக பஸ்சை நிறுத்திவிட்டு தனக்கு லேசாக நெஞ்சு வலிப்பதாக கண்டக்டரிடம் கூறி உள்ளார்.
எனினும், பஸ்சில் 55 பயணிகள் இருந்ததால் அவர்களின் நலன்கருதி உடல்நலம் குன்றியபோதும் முருகேசபாண்டியன் தொடர்ந்து பஸ்சை ஓட்டிச்சென்றார்.
சாத்தான்குளம் பஸ் நிலையத்திற்குள் பஸ் வந்தவுடன் அதிலிருந்து இறங்கிய முருகேசபாண்டியன் சற்று தள்ளாடியவாறு நடந்து சென்று, அங்குள்ள நிழலில் நின்று கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த கண்டக்டர் மற்றும் நேரக் காப்பாளர் ஆகியோர் முருகேசபாண்டியனை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
பின்னர், மேல் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு சென்ற முருகேசபாண்டியன், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
உடல் நலக்குறைவு ஏற்பட்ட போதிலும் பயணிகளை நடுவழியில் விடாமல் பஸ் நிலையம் வரை கொண்டு சென்று 55 பயணிகளின் உயிரைக் காப்பாற்றி விட்டு உயிரிழந்த டிரைவர் முருகேச பாண்டியன் உடலுக்கு பயணிகள், சக டிரைவர்கள், கண்டக்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.