சென்னை அரசு மருத்துவமனையில் தீ.. நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்..!
சென்னை சென்ட்ரல் பகுதியில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டிருந்த சிலர் சிக்கிக்கொண்டனர்.
தீ மளமளவென பரவத் தொடங்கிய நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை, தீ விபத்தால் கல்லீரல் சிகிச்சை பிரிவில் சிக்கிக் கொண்டிருந்த நோயாளிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தீ விபத்து ஏற்பட்ட வளாகத்தில் இருந்து அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தீ விபத்தால் அங்கு வைக்கப்பட்டிருந்த ஒரு சிலிண்டர் வெடித்தது. இதனால், நோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.
இதனால், ராஜீவ் காந்தி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மருத்துவமனையில் பற்றிய தீ தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.