சார்ஜ் போட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடிப்பு.. முதியவர் உயிரிழப்பு.. 3 பேர் படுகாயம்..!
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டத்தில், வீட்டுக்குள் சார்ஜில் வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி திடீரென வெடித்து தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 80 வயது முதியவர் உயிரிழந்தார்.
அவரை காப்பாற்ற முயன்றபோது, அவருடைய மகன் பிரகாஷ், மனைவி கமலம்மா, மருமகள் கிருஷ்ணவேணி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
பிரகாஷ் ஒரு வருடமாக மின்சார ஸ்கூட்டரைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தனியார் மின்சார வாகன உற்பத்தி நிறுவனத்தின் அலட்சியத்தால் மின்சார ஸ்கூட்டர் மரணத்தை ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்த சம்பவத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறோம்.
எங்கள் கூற்றுப்படி இந்த வாகனம் நேரடியாக எங்களிடமிருந்து விற்பனை செய்யப்பட்டதற்கான எந்தப் பதிவேடும் இல்லை. வாகனம் செகண்ட் ஹேண்ட் விற்பனை முறையில் மூலம் வாங்கப்பட்டதா என்பதை சரிபார்த்து வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் மின்சார இரு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட பல விபத்துக்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவங்களில் சிலர் உயிரிழந்துள்ளனர்; பலர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.