1. Home
  2. தமிழ்நாடு

கல்வி முறையில் மாற்றம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்..!

கல்வி முறையில் மாற்றம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தல்..!


தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து பேசியதாவது:

“2047-ல் உலகத் தலைவராக இந்தியா இருக்கும் பொற்காலம் அடுத்த கால் நூற்றாண்டில் வர உள்ளது. எனவே, துணைவேந்தர்கள் ஆலோசித்து, கல்வி முறையில் மீண்டும் எழுச்சி பெறுவதற்கான யோசனைகள் மற்றும் புதுமையான செயல் திட்டங்களை கொண்டுவர வேண்டும்.
கல்வி முறைகளில் மாற்றங்கள் தேவை'- ஆளுநர் ரவி
நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு பிரச்னைகள் இருந்தன. ஜம்மு - காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளால் பல்வேறு பிரச்னைகள் இருந்தன.

தற்போது அங்கு அமைதி நிலை திரும்பியுள்ளது. ஏராளமான சுற்றுலா பயணிகள் ஜம்மு - காஷ்மீருக்கு சுதந்திரமாக வந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வட கிழக்கு மாநிலங்களில் இருந்த மாவோயிஸ்டுகள் பிரச்னை வெகுவாக குறைந்துள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நாட்டை துண்டாடும் சக்திகளுக்கு அரசிடம் கருணை கிடையாது. இது துல்லிய தாக்குதலின் மூலமாக உணர்த்தப்பட்டுள்ளது.

சுதந்திரத்திற்கு முந்தைய கல்விமுறை, அப்போதைய சூழலுக்கு ஏற்றவாறு இருந்தது. தற்போது நாடு வளர்ந்து வரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்வி முறையில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

2047-ல் சர்வதேச அளவில் இந்தியா முன்னிலை வகிக்க, கல்வி முறைகளில் மாற்றங்கள் தேவை. அதற்கான திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஈடுபட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு துறைகளில் நாடு முன்னேற்றம் அடைந்துள்ளது. நம்மை அச்சுறுத்தி வந்த நாடுகள்கூட, நம்மைக் கண்டு அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.

இதற்கு உதாரணம், உக்ரைன் - ரஷ்யா போரில் எந்த நாட்டின் அழுத்தத்துக்கும் இந்தியா அடிபணியாமல் சுதந்திரமாக முடிவெடுத்தது.

இந்தியாவை முதன்மை நாடாக கொண்டு செல்ல, பல்கலைக்கழகங்கள் பன்முகத் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்குவது கடமை” என்று அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like