ரேஷன் கார்டு விதிமுறை மாற்றம்.. இவர்களுக்கு பொருள் கிடைப்பதில் சிக்கல்..!
நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நியாயவிலைக் கடைகள் மூலம் உணவு தானியங்கள் இலவசமாகவும், மற்ற பொருட்கள் குறைந்த விலையிலும் வழங்கப்படுகிறது.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே இதுபோன்ற சலுகைகளைப் பெற முடியும். ஆனால் பலர் இந்த சலுகைகளை பெறுவதில்லை.
அதேபோல, மலிவு விலையில் உணவுப் பொருட்களை வாங்கி அவற்றைக் கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்களும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், தகுதியுள்ளவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் போவதை தடுக்க அனைத்து மாநில அரசுகளிடமும் மத்திய அரசு கருத்து கேட்டுள்ளது.
இதையடுத்து, ரேஷன் கார்டு விதிமுறைகள் விரைவில் மாற்றப்படலாம் என்று கூறப்படுகிறது. தகுதியற்றவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த விதிமுறைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம், கோடிக்கணக்கான பயனாளிகள் அதாவது 86 சதவீத மக்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 கோடி பேர் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்றாலும் அதன் பலன்களைப் பெறுகின்றனர்.
கடந்த மாதம் கரீப் கல்யாண் யோஜனா திட்டத்திற்கான கால வரம்பை மத்திய அரசு நீட்டித்தது. தற்போது, தகுதியற்றவர்களுக்கு பலன்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.