பாம்பு தோலுடன் பரோட்டா பார்சல்.. பதறிப்போன வாடிக்கையாளர்..!
கேரளாவில், காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், நெடுமங்காடு பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இருந்து வாங்கிச் சென்ற பரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரியா. இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பார்சலில் பரோட்டா வாங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று அதை பிரித்து பார்த்தார்.
அப்போது, பார்சலை கட்டி இருந்த காகிதத்தில் பாம்பு தோல் இருந்ததைக் கண்டார். அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி நெடுமங்காடு போலீசாருக்கும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார்.
அவர்கள் விரைந்து சென்று பரோட்டா பார்சலை ஆய்வு செய்தனர். மேலும், ஹோட்டலுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, உணவுப் பொருட்களை விநியோகம் செய்வதில் அலட்சியமாக இருந்ததாகவும், பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைப்பிடிக்கவில்லை என குற்றம்சாட்டியும் அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்.
இதற்கிடையே, பரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.