மின் தடையால் பரிதாபம்.. படிக்க மெழுகுவர்த்தி ஏற்றிய மாணவி பலி..!
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தாம்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் லீனா. இவர், ரயில்வே நிர்வாகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகள் அர்ச்சனா (17). இங்குள்ள அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.
தாய் லீனாவுக்கு நேற்று இரவுப் பணி என்பதால் அவர் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அர்ச்சனா மட்டும் இருந்துள்ளார். இரவு 8 மணியளவில் இந்த பகுதி முழுவதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் படிப்பதற்காக மெழுகுவர்த்தியை ஏற்றியுள்ளார்.
அப்போது, கையில் இருந்த மெழுகுவர்த்தி தவறி அர்ச்சனா மீது விழுந்துள்ளது. அவர் அணிந்திருந்த ஆடை விரைவில் தீப்பிடித்துக் கொள்ளும் வகையைச் சேர்ந்தது என்பதால், ஆடையில் மளமளவென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது.
இதனால் அலறித்துடித்த அர்ச்சனாவை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு சாஸ்தாம்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து சாஸ்தாம்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.