பொதுமக்களே கவனம்.. டூ வீலர்களை திருடி நூதன முறையில் விற்பனை..!
சென்னை போரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் திருட்டு போவதாக போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் வந்தது.
இதையடுத்து, போரூர் உதவி கமிஷனர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், போரூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், போரூரில் உள்ள வணிக வளாகத்தின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரு சக்கர வாகனத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திருடிச் செல்லும் காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
அந்த காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்தபோது, இருசக்கர வாகனத்தை திருடியது அயனாவரத்தை சேர்ந்த ரமேஷ்(42) என்பது தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் ரமேஷை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
அவர், உபயோகமற்ற பழைய வாகனங்களை வாங்கி, அதன் ஆர்.சி. புத்தகத்தை வைத்துக்கொண்டு, அதே மாதிரியான வாகனங்களை பார்த்து திருடி உள்ளார்.
மேலும், திருடிய வாகனங்களை பழைய வாகனங்களின் ஆர்.சி. புத்தகத்தை காட்டி கோயம்பேட்டை சேர்ந்த மெக்கானிக் செல்வம் (38) என்பவருடன் சேர்ந்து விற்றுள்ளார்.
இதையடுத்து, செல்வத்தையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 42 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வாகனங்கள் அனைத்தும் போரூர் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.