வீடியோ வெளியிட்ட ராணுவ வீரர்.. ஆக்ஷனில் இறங்கிய டிஜிபி..!
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் பேரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலமேகம். இவர், காஷ்மீர் பகுதியில் சி.ஆர்.பி.எஃப் எனப்படும் துணை ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி (29). இவர், தனது மாமனார், மாமியாருடன் பேரூரில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், காஷ்மீரில் உள்ள நீலமேகம், தமிழக டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு கோரிக்கை விடுத்து வீடியோ ஒன்றை நேற்று (28-ம் தேதி) வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “நான், காஷ்மீரில் சி.ஆர்.பி.எஃப் படையில் பணியாற்றி வருகிறேன்.
எனது கிராமத்தில் உள்ள வீட்டில் வயதான அப்பா, அம்மா, மனைவி, 10 மாத குழந்தை ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், எனது மனைவியின் தாலிக் கொடி மற்றும் தங்கச் சங்கிலியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பறித்துச் சென்றுள்ளார்.
எல்லையில் பணிபுரியும் நாங்கள் ஆண்டுக்கு 3 முறையோ அல்லது 4 முறையோதான் ஊருக்கு வந்து மனைவி, மக்களை பார்க்கிறோம். அதிலும் எங்களுக்கு பயண நேரமே மூன்று நாட்கள் சென்றுவிடுகின்றன.
இந்நிலையில், எங்கள் குடும்பத்தினருக்கே பாதுகாப்பு இல்லை என நினைக்கும்போது எங்களால் எப்படி நிம்மதியாக பணி செய்ய முடியும்..?
எனவே, தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, எங்களை போன்று ராணுவத்தில் பணியாற்றுவோரின் குடும்பத்தினர் பாதுகாப்பை உறுதி செய்து, நாங்கள் நிம்மதியாக பணி செய்ய வழி வகை செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, காஷ்மீரில் உள்ள சி.ஆர்.பி.எஃப் வீரர் நீலமேகத்தையும், பேரூரில் உள்ள அவரது மனைவி கலைவாணியையும் தொலைபேசியில் அழைத்து ஆறுதல் கூறியதுடன், “உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதியளித்தார்.
இதைத் தொடர்ந்து, திருச்சி ஜம்புநாதபுரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, திருடுபோன நகைகளை மீட்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.