500 ரூபாய் அபராதம் இவர்களுக்கு இல்லையா..?: கேட்கிறார் ஓபிஎஸ்..!
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இல்லையா..? சட்டப்பேரவையில் பெரும்பாலான உறுப்பினர்கள் முகக்கவசம் அணியவில்லை” என்றார்.
இதற்கு பதில் அளித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “முகக்கவசம் அணிந்து கொள்வது அனைவருக்கும் நல்லது” என்று தெரிவித்தார்.
அப்போது, “அனைத்து உறுப்பினர்களின் மேசையிலும் முகக்கவசம் வைக்கப்பட்டுள்ளது. அதை அணிந்து கொண்டு பேசுவது சிரமம் என்பதால் கழற்றி வைத்துள்ளனர்” என்று சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் முகக்கவசம் அணிந்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்றார். உரையாற்றும்போது மட்டும் முகக்கவசத்தை கழற்றி வைத்துவிட்டு அவர் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.