விவாதத்துக்கு அழைத்த அண்ணாமலை.. பதிலடி கொடுத்த திருமாவளவன் !
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் (ONGC) பணிபுரியும் ( SC/ST) அதிகாரிகள், ஊழியர்கள் ஒன்றிணைந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமவாளவன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் பேசியதாவது, இயக்குனர் பாக்கியராஜின் கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. அவர் எதையும் நிதானமாக பேச கூடியவர், சீர் தூக்கி பேசக்கூடியவர். அவரை யார் இப்படி பேச வைத்தார்கள்? என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.
அம்பேத்கர் வழியில் மோடி செல்கிறார் என்பதை விவாதிக்க பாஜக தலைவர் அண்ணாமலை திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்து வருவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், விளையாட்டு போட்டிகளில் கூட கேட்டகிரி இருக்கிறது. சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் என்று இருக்கிறது. அரசியலில் அண்ணாமலை ஒரு சப் ஜூனியர். அவரோடு விவாதிக்க அவரைப்போல ஒரு சப் ஜூனியரை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து அனுப்பி வைக்கிறேன் என்று பதிலளித்தார்.
அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறையில் நடந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மாநில அரசுகளுக்கு பல்வேறு நெருக்கடிகளை ஒன்றிய அரசு கொடுத்து வரும் நிலையிலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். இசையமைப்பாளர் இளையராஜா இன்று வரை அம்பேத்கர் படத்துக்கு மாலை போட்டு மரியாதை செலுத்தியுள்ளாரா?. பல்வேறு இடங்களில் தலித் மக்கள் பாதித்தபோது குரல் கொடுத்துள்ளாரா?. அம்ேபத்கர் பற்றி அவருக்கு என்ன தெரியும்.
அம்பேத்கர் பிறந்த மகாராஷ்டிராவில் கூட அவருடைய பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவிக்கவில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள திமுக அரசு தான், அவரது பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்துள்ளது, என்றார்.
newstm.in