மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மாதம் 900 ரூபாய்.. முதல்வர் அறிவிப்பு..!
“நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிகளுக்கு மாதந்தோறும் 900 ரூபாய் வழங்கப்படும்” என, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில், இயற்கை விவசாயம் தொடர்பான ‘நிடி ஆயோக்' தேசிய பயிலரங்கு நடந்தது. இதில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்ற மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசியதாவது:
“இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மாநில அரசின் இயற்கை வேளாண் மேம்பாட்டு வாரியம் சார்பில் பல்வேறு திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இயற்கை விவசாயத்திற்கு நாட்டு மாடுகள் அவசியம்.
இதன்படி, ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் ஒரு நாட்டு மாடு வளர்க்க வேண்டும். அவர்களுக்கு, மாதந்தோறும் 900 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளோம்.
மாநிலத்தின் 52 மாவட்டங்களில், தலா 100 கிராமங்களில் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு சிறப்பு நடவடிக்கைகளை துவங்க உள்ளது.
மாநிலத்தில், இதுவரை 1.65 லட்சம் விவசாயிகள் இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டி உள்ளனர். இயற்கை விவசாய சூழலை உருவாக்க, பயிலரங்குகளும் ஏற்பாடு செய்யப்படும்.
நர்மதா ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள வயல்களில் இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்” என்று அவர் பேசினார்.