சீன எல்லையில் மோதல்.. மேலும் 4 இந்திய வீரர்கள் கவலைக்கிடம் !
இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.
இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கியை கொண்டு தாக்குதல் நடைபெறவில்லை. மாறாக கற்கள், கம்பு, கம்பிகள் உள்ளிட்டவைகள் மூலம் மோதிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த மோதலில் இந்திய தரப்பில் இதுவரை 20 வீரர்கள் வீரமரணம் அடைந்திருப்பதாக இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், காயமடைந்த இந்திய வீரர்களில் 4 வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதேபோல் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மோதல் நடைபெற்ற கல்வான் பகுதியில் உடலை உறையவைக்கும் கடும் குளிர் நிலவி வருகிறது.
newstm.in