தஞ்சையில் அதிர்ச்சி.. ஷவர்மா சாப்பிட்ட 3 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி !!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஷவர்மா சாப்பிட்ட கால்நடை மருத்துவ மாணவர்கள் 3 பேர் மயக்கம் அடைந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி செயல்படுகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் ஒரத்தநாடு பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகங்களில் சாப்பிடுவது வழக்கம். அதேபோல், நேற்று இரவு அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்களான பிரவீன், பரிமலேஸ்வரன் , மணிகண்டன் ஆகியோர் ஒரத்தநாட்டில் உள்ள துரித உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்டு சென்ற நிலையில் அவர்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் போன்ற உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவர்களை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று மாணவர்களுக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் கேரள மாநிலம் காசர்கோடு செருவத்தூர் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது மாணவி தேவானந்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதை தொடர்ந்து தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள ஷவர்மா கடைகளில் கெட்டு போன இறைச்சி உள்ளதா? என உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in