20 நாட்களுக்கு முன்பே எச்சரித்தாரா சிவன்மலை ஆண்டவர்?
திருவண்ணாமலை தீப மலைக்குப்பாதைக்கு அருகில் டிசம்பர் 01ம் தேதி ஏற்பட்ட கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. மண்சரிவு மற்றும் ராட்சத பாறை உருண்டு வீடு மீது விழுந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்தது. இந்த அதிர்ச்சியில் மக்கள் மீளுவதற்குள் திருவண்ணாமலையில் மேலும் 2 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.
இந்நிலையில், திருவண்ணாமலையில் இப்படி ஒரு பயங்கரம் நடக்க போவதை சிவன்மலை ஆண்டவர் 20 நாட்களுக்கு முன்பே உணர்த்தி உள்ளதாக பக்தர்கள் கூறி வருகிறார்கள்.
சிவன்மலை என்பது திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து 5 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது. பெயர் தான் சிவன்மலை. ஆனால் இந்த மலை மீது அமைந்திருப்பது முருகன் கோவில். அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பட்ட தலங்களில் இதுவும் ஒன்று. தமிழகத்தில் உள்ள மிகவும் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். சிவவாக்கியர் சித்தர் வந்து தவம் செய்து, முருகனுக்கு கோவில் அமைத்து வழிபட்ட தலம் என்பதால் அவரத பெயராலேயே இந்த மலை சிவன் மலை என அழைக்கப்படும். 496 படிகள் கொண்ட இந்த மலைக்கோவிலில் பல வித்தியாசமான வழிபாட்டு முறைகள் உள்ளது. மற்ற கோவில்களைப் போல் இங்கு முதல் பூஜை விநாயகருக்கு பதிலாக முருகனுக்கே நடத்தப்படுகிறது. நவகிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானை நோக்கி காட்சி தருகின்றன. இவை அனைத்தையும் விட வினோதமான விஷயம் இங்குள்ள ஆண்டவர் உத்தரவு பெட்டி தான்.
கோவிலின் முன்புறம் கண்ணாடி கதவுகளால் மூடப்பட்ட பெட்டி ஒன்று வைக்கப்பட்டு, தினமும் இதற்கு பூஜை நடத்தப்படுகிறது. இதற்கு சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டி என்று பெயர். சிவன்மலை முருகன் ஏதாவது ஒரு பக்தர்களின் கனவில் சென்று உத்தரவுப்பெட்டியில் குறிப்பிட்ட ஏதாவது பொருளை வைக்கச் சொல்லி உணர்த்துவார்கள். அவர்கள் அதை கோவில் பூசாரியிடம் சென்று தெரிவித்தால், அவர்கள் உடனடியாக முருகப் பெருமானிடம் பூக்கட்டிப் போட்டு உத்தரவு கேட்பார்கள். வெள்ளைப்பூ வந்தால் அந்த பக்தர்கள் சொன்ன பொருள் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்படும். அடுத்த பக்தர்களின் கனவில் மீண்டும் உத்தரவு வரும் வரை ஏற்கனவே வைத்த பொருளை வைத்தே பூஜை செய்வார்கள்.
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் என்ன பொருள் வைக்கப்படுகிறதோ அது தொடர்பாக நன்மைகளோ அல்லது தீமைகளோ நாட்டில் நடைபெறும். ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் நீர் வைத்து வழிபட்ட போது சுனாமி பேரலை வந்தது. தராசு வைக்கப்பட்ட போது விலைவாசி கடுமையாக உயர்ந்தது. ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்ட போது பணமதிப்பிழப்பு நடைபெற்றது. துப்பாக்கி, வில்-அம்பு வைக்கப்பட்ட போது போர் அல்லது பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டது. மஞ்சள், தாலிச்சரடு போன்ற மங்கல பொருட்கள் வைக்கப்பட்ட போது சுப நிகழ்வுகள் அதிகம் நடந்துள்ளன. இந்நிலையில் நவம்பர் 12 ம் தேதி சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் மண் அகல் விளக்கு வைக்கும் படி உத்தரவு வந்து, விளக்கு வைத்து பூஜை செய்யப்பட்டது.
கார்த்திகை மாதம் என்றால் விளக்கு வழிபாடு தான். கார்த்திகை தீபம் என்பதும் திருவண்ணாமலை தலத்துடன் தொடர்புடையது. மண்ணால் திருவண்ணாமலை தலத்தில் வரப் போகும் ஆபத்தை தான் முன்கூட்டியே உணர்த்துவதற்காக தான் மண் அகல் விளக்கு, ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கும் படி உத்தரவு வந்ததா என்ற சந்தேகம் பக்தர்களிடம் எழுந்துள்ளது. இதனால் ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் இருக்கும் மண் அகல் விளக்கு எப்போது மாற்றப்படும்? அடுத்து என்ன பொருள் வைக்க உத்தரவு வரப் போகிறது? அதனால் நாட்டில் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படப் போகிறது? என்ற கேள்விகள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. இதுவரை சிவன்மலை ஆண்டவரின் உத்தரவை சாதாரணமாக நினைத்தவர்கள் கூட தற்போது பயபக்தியுடன் கவனிக்க துவங்கி உள்ளனர்.
.png)