மதிக்காத மாநகராட்சிக்கு ரூ.1.33 கோடி அபராதம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி..!
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, நத்தப்பேட்டை குப்பை சேமிப்பு கிடங்கில் கொட்டப்படுகிறது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை இங்கு முறையாக செயல்படுத்த வேண்டும் என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
இத்திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால், காஞ்சிபுரம் நகராட்சியாக இருந்தபோது, கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், 'நோட்டீஸ்' அனுப்பியது. இதற்கு, காஞ்சிபுரம் நகராட்சி உரிய பதில் அளிக்கவில்லை.
இந்நிலையில், நத்தப்பேட்டை குப்பை கிடங்கில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தீப்பற்றி எரிந்தது. சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டதால், மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சிக்கு 38 லட்சம் ரூபாய் அபராதம் வித்துள்ளது.
அதேபோல், கழிவு நீரை சுத்திகரிப்பு செய்வதில் வழிமுறை பின்பற்றாததால், 95 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ரவிசந்திரன் கூறியதாவது: “காஞ்சிபுரம் நகராட்சியாக இருக்கும்போது, திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படவில்லை.
கழிவு நீர் திட்டம் செயல்படுத்துவதில், அதிகாரிகள் மெத்தனம் காட்டினர். வழிகாட்டுதல் முறைப்படி, அதிகாரிகள் உரிய பதில் அளிக்காததால் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைமைக்கு புகார் அளித்தோம்.
இதை விசாரித்த வாரியம், குப்பை மற்றும் கழிவு நீரை முறையாக கையாளாததால், இரண்டுக்கும் சேர்த்து 1.33 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இந்த அபராதத்தை செலுத்தவில்லை என்றால், அபராத தொகை மேலும் அதிகரிக்கும்” என்று அவர் கூறினார்.