மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி.. குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதி.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!
தஞ்சை அப்பர் கோவில் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து பலியான 11 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் நிதி அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சாவூர் அருகே, களிமேடு கிராமத்தில் அமைந்துள்ள அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தொடர்ந்து, களிமேடு பகுதியில் உள்ள பல்வேறு தெருக்கள் வழியாக தேர் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில் களிமேடு பகுதியில் உள்ள பூதலூர் சாலையில் தேர் வந்தபோது, அங்கிருந்த உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது.
இந்த விபத்தில் மோகன் (22), பிரதாப் (36), ராகவன் (24), அன்பழகன் (60), நாகராஜ் (60), சந்தோஷ் (15), செல்வம் (56), ராஜ்குமார் (14), சுவாமிநாதன் (56), கோவிந்தராஜ் (45), பரணிதரன் (13) ஆகிய 11 பேர் பலியாகினர். மேலும், 10-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து, படுகாயமடைந்த அனைவரும் தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்த தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 5 லட்சம் நிதி அளிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;
“தஞ்சை களிமேட்டில் நடந்த தேர் திருவிழாவின் போது 11 பேர் பலியான சம்பவத்தை அறிந்து துயரமடைந்தேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.