+1 பொதுத்தேர்வு: கணினி அறிவியல் மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்: தேர்வுத்துறை..!

பிளஸ்-2 பொதுத் தேர்வு நிறைவு பெற்றதை தொடர்ந்து பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 27-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. இறுதி நாள் அன்று வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடந்தது. இதில் உயர்கல்விக்கான முக்கிய பிரிவுகளில் சேருவதற்கு முக்கிய பாடமாக பார்க்கப்படக் கூடிய வேதியியல் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாகவே தேர்வை எழுதிய மாணவ-மாணவிகள் கருத்து தெரிவித்தனர்.
ஒரு மதிப்பெண் வினாக்களில் 12 வினாக்கள் பாடப்பகுதியின் பின்புறத்திலும், 3 வினாக்கள் பாடப்பகுதிக்குள் இருந்தும் கேட்கப்பட்டு இருந்ததாக கூறிய அவர்கள், 2 மதிப்பெண் வினாக்களை தவிர, 3 மற்றும் 5 மதிப்பெண் வினாக்கள் கடினமாக கேட்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்தனர். பிளஸ்-2, பிளஸ்-1 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நிறைவு பெற்று, விடைத்தாள் திருத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், பிளஸ்-1 வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் 24வது கேள்வியை எழுதியிருந்தாலே 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கேள்வி தவறாக கேட்கப்பட்டதால் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மே 19-ம் தேதி பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.