ஏர்டெல் அடிப்படை கட்டணம் 57 சதவீதம் உயர்கிறது..!
பார்தி ஏர்டெல் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கான நுழைவு திட்டத்தின் அடிப்படை கட்டண விகிதத்தை 57 சதவீதம் உயர்த்தி உள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, பீகார், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு உத்திரபிரதேசம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. பரிசோதனை அடிப்படையில் ஒடிசா மற்றும் ஹரியானா மாநிலங்களில் 2 மாதங்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம், இதர மாநிலங்களுக்கும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
2ஜி ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கான நுழைவு கட்ட திட்டமாக 28 நாட்களுக்கு ரூ.99 என இருந்த கட்டண விகிதம் ரூ.155 என மாற்றி அமைக்கப்படுவதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. எண்ணற்ற வாய்ஸ் அழைப்புகள், 1ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் ஆகியவை இந்த கட்டண விகிதத்தில் அடங்கும். இதே கட்டணத்துடனான நுழைவு கட்ட திட்டத்தில், போட்டி நிறுவனமான ஜியோ 2ஜிபி டேட்டா வழங்குகிறது.
ஏர்டெல் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலையில் இதே நுழைவு கட்ட திட்டத்தின் கட்டண விகிதத்தை ரூ.79 என்பதிலிருந்து ரூ.99 என்பதாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் கொண்டுவரும் 2ஜி வாடிக்கையாளர்களுக்கான இந்த கட்டண விகித உயர்வின் வரிசையில், 4ஜி வாடிக்கையாளர்களுக்கான கட்டண உயர்வு விரைவில் அறிவிப்பாக உள்ளது. இதற்கிடையே நாட்டின் பெருநகரங்களில் 5ஜி சேவை வழங்குவதற்கான ஏற்பாடுகளிலும் ஏர்டெல் நிறுவனம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.