பால் விலை லிட்டருக்கு 4 ரூபாய் உயர்வு.. நாளை முதல் அமல்..!
புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பால் கொள்முதல் விலையை 3 ரூபாய் உயர்த்தி அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது விற்பனை விலையில் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தி உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அரசு நிறுவனமான பான்லே மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சமீப காலமாக தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதனால், பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலையை உயர்த்த ஆலோசித்து வந்தது.
புதுச்சேரிக்கு ஒரு நாளுக்கு பாலின் தேவை 1 லட்சத்து 5 ஆயிரம் லிட்டராக உள்ளது. ஆனால் 65 ஆயிரம் முதல் 75 ஆயிரம் லிட்டர் வரை மட்டுமே உற்பத்தியாகிறது. மீதமுள்ள பால் தமிழகம் மற்றும் தனியார் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதால், அங்கிருந்து போதிய அளவுக்கு பாலை வாங்கமுடியவில்லை. இதனால் புதுச்சேரியில் பால் தட்டுப்பாடு நிலவியது. இதை சமாளிக்க சமீபத்தில் பால் கொள்முதல் விலையை அரசு 3 ரூபாய் உயர்த்தியது. அதாவது கொள்முதல் விலை 34 ரூபாயிலிருந்து 37 ரூபாயாக உயர்த்தியது.
தற்போது பால் விற்பனை விலையையும் புதுச்சேரி அரசு லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தியுள்ளது. அதன்படி, 42 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் பால் 46 ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதேபோல பல்வேறு ரகங்களின் பாலின் விலையும் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த விலை உயர்வு நாளை (11-ம் தேதி) முதல் அமலுக்கு வர இருக்கிறது.