இந்த வழித்தடத்தில் இரவில் ரயில்களை 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும்..!!
யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் தெற்கு ரயில்வேக்கு நீதிபதிகள் இன்று புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
யானைகள் பாதுகாப்பு தொடர்பான வழக்கில் இன்று நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கோர்ட்டு பிறப்பித்த உத்தரவின்படி, 18 கோடி ரூபாய் மதிப்பில் சோலார் விளக்குத் திட்டத்தை தவிர்த்து மற்ற உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டதாக ரெயில்வே தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தவில்லை என்றால் கஞ்சிக்கோடு - வாளையாறு வழித்தடத்தில் இரவு நேர ரெயில் சேவையை நிறுத்த வேண்டி வரும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர். இந்த வழித்தடம் முக்கியமானது என்பதால் இது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டாம் என்று ரெயில்வே தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கடினமான மலைப் பகுதியில் இந்த ரெயிலை இயக்கக்கூடிய தொழில்நுட்பம் உள்ளபோதும் கூட இந்த உத்தரவை உங்களால் செயல்படுத்த முடியாதது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இந்த வழித்தடத்தில் ஏற்படக்கூடிய விபத்துகளால் வருடத்திற்கு 5 முதல் 6 யானைகள் வரை உயிரிழப்பதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த வழித்தடத்தில் இரவில் ரெயில்களை 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.