1. Home
  2. தமிழ்நாடு

மீனவர்கள் வாரம் 2 நாட்கள் சுருக்குமடி வலையை பயன்படுத்தலாம்... ஆனால்?


தமிழக கடற்பரப்பில் பவளப்பாறைகள் மற்றும் மீன் குஞ்சுகள் சிக்கிக்கொள்வதால் 'சுருக்கு மடி வலையைக்' கொண்டு மீனவர்கள், மீன் பிடிக்க தடை விதித்து கடந்த 2000-ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்தநிலையில், மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு, 'சுருக்கு மடி வலையைக்' கொண்டு மீன் பிடிக்கலாம் என்று கடந்த 2014-ம் ஆண்டு பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையின்படி, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 12 நாட்டிக்கல் மைல் தொலைவுக்குள்ளான கடற்பரப்பில் சுருக்கு மடி வலையைக் கொண்டு மீன்பிடிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி மீனவர் நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி தடை விதித்து உத்தரவிட்டு, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது.

இதனையடுத்து சுப்ரீம் கோர்ட்டில், சுருக்குமடி வலையை 12 நாட்டிக்கல் சுற்றளவுக்குள் பயன்படுத்த அனுமதிக்க கோரியும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக சுருக்குமடி வலையைக் கொண்டு செல்ல அனுமதிக்க கோரியும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் பகுதிகளில் மீன் பிடிப்பதற்கு சுருக்குமடி வலையை பயன்படுத்திவிட்டு கரைதிரும்பும் மீனவர்களை எந்தவிதமான தொந்தரவும் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் இடையீட்டு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசு தாக்கல் செய்த பதில்மனுவில், "இயற்கை வளங்களைப் பேணிக்காக்கவும், பாரம்பரிய மீன்பிடித் தொழிலாளர்களைப் பாதுகாக்கவும் மாநில அரசு தனது அதிகாரத்திற்குட்பட்டு இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. எனவே இதில் நீதிமன்றம் தலையிட வேண்டியது இல்லை" என்று தெரிவித்திருந்தது.

சுருக்குமடி வலைக்கு ஆதரவு தெரிவிக்கும் மீனவர்கள் சார்பில், "மத்திய அரசின் நிபுணர் குழு பரிந்துரையில், இந்த வலையைப் பயன்படுத்துவதால் கடல் வளம், மீன் வளம் பாதிக்கப்படும் என்ற எந்த தகவலும் இல்லை. எனவே சுருக்குமடி வலையைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். 12 நாட்டிக்கல் மைல்களுக்கு அப்பால் உள்ள பகுதிகளில் ஆவது இந்த வலைகளைப் பயன்படுத்த தமிழக கடற்பரப்பு எல்லைகளைப் பயன்படுத்தி வலைகளைக் கொண்டுச் செல்ல அனுமதிக்க வேண்டும்" என்று வாதிப்பட்டிருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

Trending News

Latest News

You May Like