ஒரே பள்ளி பேருந்தில் 130 பேர் – மாணவிகள் மயக்கம்!!
மதுரை மாவட்டம் திருப்பாலை பகுதியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளி வாகனத்தில் மாணவிகள் வீடு திரும்பினர். அப்போது பள்ளிக்கு சொந்தமான ஒரு வாகனத்தில் 130 க்கும் மேற்பட்ட மாணவிகளை அழைத்துச் சென்றுள்ளனர்.
கள்ளந்திரி அருகே வட்டார போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டதை அறிந்த வாகன ஓட்டுனர் அதே பகுதியில் உள்ள சந்து ஒன்றுக்குள் பள்ளி வாகனத்தை கொண்டுசென்று 30 நிமிடமாக நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் மாணவிகளுக்குள் ஏற்பட்ட நெரிசலில் மூச்சு திணறல் ஏற்பட்டு 4 மாணவிகள் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் கள்ளந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மாணவிகள் 4 பேரும் நலமுடன் உள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார். ஒரே வாகனத்தில் அதிகளவிலான மாணவிகளை அழைத்துசென்றது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருத்திகா கூறியுள்ளார்.
newstm.in