மக்களே உடனே போங்க..!! ரூ.1000 நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்..!!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 11ஆம் தேதி வரலாறு காணாத கனமழை கொட்டித்தீர்த்தது. இந்த அதீத கனமழையால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி ஆகிய பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6 மணி நேரத்தில் 44 செ.மீ. மழை கொட்டி தீர்த்தது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் ஆய்வு செய்த பிறகு, மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதல்வர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 1,000 வழங்க உத்தரவிட்டிருந்தார்.அதன்படி நேற்று ரூ. 16.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.
மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்கா குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ 1,000 நிவாரண உதவி தொகை இன்று முதல் ( நவம்பர் 24) அந்தந்த நியாய விலை கடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்திருந்தார். அதன்படி இன்று சீர்காழியில் 99 ஆயிரத்து 518 குடும்ப அட்டைதாரர்களுக்கும், தரங்கம்பாடியில் 62, 192 குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்கும் பணி தொடங்கியது. மயிலாடுதுறை சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களில் உள்ள 239 நியாய விலை கடைகளின் மூலம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.