அரசுப் பள்ளிகளில் இன்று திரையிடப்படும் 'ஷ்வாஸ்' திரைப்படம் ...!
கல்வி என்பது வெறுமனே ஏட்டுக்கல்வி மட்டுமல்ல. பாடப் புத்தகங்களை படிப்பதோடு சேர்த்து வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக்கொள்வதும்தான். கலை, பண்பாடு சார்ந்து கற்பித்தலும் கற்றலும் இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியம். தொழில்முறைக் கலைஞர்களாகவும் பின்னாளில் வருவதற்கான வாய்ப்புகளையும் மாணவர்களுக்கு உருவாக்கித் தரும் நோக்கத்தோடு பல்வேறு கலைச் செயல்பாடுகளை தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அரசுப் பள்ளி மாணவர்களுக்கென முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாதந்தோறும் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான திரையிடல் திட்டமொன்றை 'சிறார் திரைப்பட விழா' என்கிற பெயரில் வகுத்துள்ளது.மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது வாரமும் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும்.
இந்நிலையில் இன்று 3 ஆம் தேதி மாற்றுத்திறனாளி தினத்தை முன்னிட்டு பள்ளிகளின் " shawaas " என்கிற மராத்தி மொழி திரைப்படத்தினை ஒளிபரப்ப வேண்டும் என பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி 3.12.2022 பள்ளி நாளாக இருந்தால் அன்று ஒளிபரப்பு வேண்டும் என்றும் அல்லது விடுமுறையாக இருந்தால் வரும் திங்கள்கிழமை ஒளிபரப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தத் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு இந்திய அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படமாகும்.அதன்படி வெளிநாட்டு மொழி திரைப்பட பிரிவில் இந்த திரைப்படம் ஆறாவது இடத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது" என இந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.