காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை மீது பரபரப்பு குற்றச்சாட்டு!!
காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தி மாநில தலைவர் பதவியை பறிக்க எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை முயல்வதாக தமிழக எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் இடையே கோஷ்டிப் பூசல் இருந்து வருகிறது. ஜெயக்குமார் புதிதாக நியமித்த நிர்வாகிகளுக்கு ரூபி மனோகரன் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இதனால் கடந்த 15ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில், நடைபெற்ற 2024 மக்களவை தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கடும் மோதல் ஏற்பட்டது.
அப்போது, கே.எஸ்.அழகிரியின் ஆதரவாளரான எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், ரூபி மனோகரனின் ஆதரவாளர்களை சரமாரியாக தாக்கினார்கள்.
இச்சம்பவத்தை தொடர்ந்து, தமிழக காங்கிரஸின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, சத்தியமூர்த்தி பவனில், ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ, எஸ்.சி.பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
நேற்று ஆஜரான பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஞ்சன் குமார், சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவத்திற்கு செல்வபெருந்தகை எம்.எல்.ஏ தான் காரணம், அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளேன் என தெரிவித்தார்.
செல்வபெருந்தகை காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தி, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை குறி வைத்து செயல்படுகிறார் என்ற பரபரப்பு குற்றச்சாட்டை அவர் முன்வைத்துள்ளார்.
newstm.in