காங்கிரஸ் எம்எல்ஏ தற்காலிக நீக்கம்: ஒழுங்கு நடவடிக்கை குழு அதிரடி..!
நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரனை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் கடந்த 15-ம் தேதி கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாக, கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ மற்றும் எஸ்சி. பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், வருகிற 24-ம் தேதி (இன்று) சத்தியமூர்த்தி பவனில் நடைபெற உள்ள ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் எஸ்சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஆனால், ஒழுங்கு நடவடிக்கை குழுவில் நேரில் ஆஜராக அவகாசம் கேட்டும் ரூபி மனோகரன் எம்எல்ஏ கடிதம் அனுப்பி இருந்தார்.
ரூபி மனோகரன் சொல்லும் காரணம் ஏற்புடையது அல்ல. அடுத்த கூட்டத்தில் ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி உரிய விளக்கம் அளிக்க வேண்டும். அது வரை ரூபி மனோகரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. 63 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் அளித்த மனுவின் அடிப்படையில் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.