ராணுவத்தில் பெண் காவலர் பணி.. பாதுகாப்புத் துறை முக்கிய அறிவிப்பு..!
ராணுவத்தில் பெண் காவலர் பணிக்கு ஆட்சேர்ப்பு குறித்த முக்கிய தகவலை பாதுகாப்புத் துறை பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய பாதுகாப்புத் துறையின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'இந்திய ராணுவத்தில் பெண் காவலர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான ஆட்சேர்ப்பு முகாம் நவ.27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை வேலூரில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெறுகிறது.
இதில், பங்கேற்பதற்கான அனுமதிச் சீட்டு கிடைத்த தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள், இதுதொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள தங்களது சான்றிதழ்களுடன் வந்து பங்கேற்கலாம்.
இதுகுறித்து கூடுதல் விவரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். இந்தத் தேர்வு வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடைபெறும். எனவே, விண்ணப்பதாரர்கள் யாரிடமும் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.