கார்த்திகை மாத அமாவாசை.. ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்..!
கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கரையில் புனித தீர்த்தம் ஆடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து கோவில்களில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலும் ஒன்று. காசிக்கு செல்லும் பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்று ஐதீகம் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்ய வருகை தருவது வழக்கம்.
மேலும், அமாவாசை தினங்களில் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. இன்று கார்த்திகை மாத அமாவாசை தினம் என்பதால் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் பலர் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரையில் தர்ப்பணம் செய்து சென்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்குள்ள 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடி சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தனர்.