1. Home
  2. தமிழ்நாடு

அந்த உத்தரவெல்லாம் உண்மையில்ல.. போக்குவரத்து அமைச்சர் விளக்கம்..!

அந்த உத்தரவெல்லாம் உண்மையில்ல.. போக்குவரத்து அமைச்சர் விளக்கம்..!

அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய விரும்பாத பெண்கள் காசு கொடுத்து டிக்கெட் பெற்று பயணம் செய்யலாம் என்று பரவி வரும் செய்திக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில், திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி, பெண்களுக்கான இலவச பேருந்து திட்டத்தைக் குறிப்பிட்டு, இப்போது எல்லாம் பெண்கள் பேருந்தில் ஓசியில் போகிறார்கள் என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.


அமைச்சர் பொன்முடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனங்கள் எழுந்தன. இதற்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, தான் வழக்கு மொழியில் விளையாட்டாக ஓசியென கூறியதை சிலர் தவறாக புரிந்துக்கொண்டனர். அதை பெரிதுபடுத்த வேண்டாம் என விளக்கம் அளித்தார்.

இதனிடையே, கோவையில் மூதாட்டி ஒருவர், இலவசமாக பேருந்தில் பயணிக்க மாட்டேன் என்றும் டிக்கெட்டிற்கு பணம் கொடுத்து தான் பயணிப்பேன் என நடத்துநரிடம் அடம் பிடித்த வீடியோ வைரலானது.


இந்நிலையில், இது போன்ற சம்பவங்களை தவிர்க்க, இலவசமாக பயணம் செய்ய விரும்பாத பெண்கள் காசு கொடுத்து பயணச்சீட்டு வாங்கி பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், "பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வேண்டுமென்றால் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. அது உண்மையில்லை, வதந்தி" என விளக்கம் அளித்தார்.

Trending News

Latest News

You May Like