ராகுல் காஷ்மீர் போவதற்குள் காங்கிரஸ் காணாமல் போய்விடும்.. எல்.முருகன் ஆரூடம்..!
"ராகுல் காந்தி தொடங்கியுள்ள நடைபயணம் ஆரம்பத்திலேயே தோல்வி. அது காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும்" என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மதுரை எய்ம்ஸ் ஆரம்பகட்டப் பணிகள் 95% முடிந்தது என்று தான் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா கூறினார். அவர் கூறியதை புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகள் விமர்சனம் செய்கின்றனர்.
இந்து மக்களை ஆ.ராசா அவமதித்ததை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். ஓட்டுக்காக இந்து மக்களை ஏமாற்றும் செயலை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். ராகுல் காந்தி நடைபயணம் ஆரம்பத்திலேயே தோல்வி.
ராகுல் காந்தி இந்த பயணத்தை தொடங்கிய போதே கோவாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சியிலிருந்து வெளியேறினர். அவர் காஷ்மீர் செல்வதற்குள் காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும்.
கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பாஜகவினரின் வீடுகள், அலுவலகங்களை குறிவைத்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்துகிறது. அந்த தாக்குதலை யார் செய்தார்களோ அவர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.